Wednesday, March 11, 2015

ஆடு வளர்ப்பு - பொலிக் கிடா

''ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்!''


பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு. ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

  • சிப்பாய் நடை போடும் கன்னி!
  • கடலோரத்துக்கு ஏத்த கொடி! இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க. 
  • சேலம் கருப்பு! இதை, 'வரை ஆடு’னும் சொல்லுவாங்க. 
  • பள்ளை ஆடு! இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. 
  • மோளை ஆடு!


இப்ப சொன்ன இந்த அஞ்சு ரகமும்... தமிழ்நாட்டைச் சேர்ந்த இனங்கள்தான். இது இல்லாம ஜமுனாபாரி, தலைச்சேரி மாதிரியான வெளி மாநில இனங்களையும் வளர்க்கலாம். எந்த இனங்களையும் சேராத ஆடுகளும் இருக்கு. அதை பொதுவா 'நாட்டு ஆடு’னு சொல்வாங்க.

இனவிருத்தி இப்படித்தான்!
வெள்ளாடுகளைப் பொறுத்தவரை பெட்டை 6 மாசத்திலும், கிடா 8 மாசத்திலும் பருவத்துக்கு வரும். ஆனா, பெட்டையை 10 மாசத்துல இருந்து 15 மாசத்துக்குப் பிறகும், கிடாவை 18 மாசத்துக்குப் பிறகும்தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தணும்.

19 நாள் முதல் 21 நாள் வரைக்கும் ஆடுகளோட சினைப் பருவம் இருக்கும். அடிக்கடி கத்தும், வாலை வேகமா அசைக்கும், சரியா தீவனம் எடுக்காது, மத்த ஆடுக மேல தாவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிஞ்சா... ஆடுகள் சினைக்குத் தயாராயிடுச்சுனு அர்த்தம். அறிகுறி தெரிஞ்ச 24 மணி நேரத்துக்குள்ள பொலிக் கிடாயுடன் சேர்த்துடணும். சினை பிடிச்ச பிறகு, குட்டி போடுற வரைக்குமான சினைக்காலம் 146 முதல் 151 நாட்கள். குட்டி போட்ட பிறகு, மூணு மாசம் வரைக்கும் பாலூட்டும். அதுக்குப் பிறகுதான் அடுத்த சினைக்கு விடணும்.


கிடா தேர்வில் கவனம்!
கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும்.



சிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும். பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும். பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.

ஆடுகளைக் கழிக்க வேண்டும்!
ஒவ்வொரு வருஷமும்... 10% முதல் 20% வரைக்கும் மந்தையில தேவையில்லாத ஆடுகளைக் கழிச்சிடணும். பிறக்கற குட்டிக, இந்தக் கழிவு ஆடுகளோட எண்ணிக்கையை ஈடுகட்டும். அதனால் மொத்த எண்ணிக்கை பாதிக்காது. சரி, எந்தெந்த ஆடுகள கழிக்கணும்?ங்கற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். அதாவது, குட்டிகளோட எடை வழக்கத்தைவிட கம்மியா இருந்தா... அந்த குட்டிகளோட தாய் ஆட்டை கழிச்சுடணும். சினை நிக்காத ஆடுகள், இனவிருத்திக்கான தகுதி இல்லாதவை, குணப்படுத்த முடியாத காயம், ஊனம் இருக்கற ஆடுகள், பல் இல்லாதவை, மரபியல் சார்ந்த நோய் இருக்கற ஆடுகள்னு லாபம் கொடுக்க முடியாத ஆடுகளை அப்பப்போ கழிச்சுடணும்'' என்று விளக்கமாக பேசினார் பாரதி.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete