Thursday, October 9, 2014

வெள்ளாட்டின் பயன்கள்

இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் செம்மறி ஆட்டு இறைச்சிக்கும், வெள்ளாட்டு இறைச்சிக்கும் அதிக வேறுபாடு காட்டப்படுவதில்லை. தமிழ் நாட்டின் பல பகுதினளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகின்றது. இது போன்று, மலேசியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், முன்னேறிய மேல் நாடுகளில், வெள்ளாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி போல் விரும்பப்படுவதில்லை. வெள்ளாடுகள் வெட்டப்படும்போது 50 முதல் 55% இறைச்சி கிடைக்கிறது. எனினும் கீழை நாடுகளில் அதிக அளவில் வெள்ளாட்டின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செம்மறி ஆட்டு இறைச்சி மட்டன் (Mutton) எனப்படும்போது, வெள்ளாட்டு இறைச்சி செவ்வான் (Chevon) எனப்படுகின்றது.
வெள்ளாட்டு இறைச்சியில் உள்ள சத்துப் பொருட்கள்:
ஈரப்பதம் —- 74.2%
புரதம் —- 21.4%
கொழுப்பு —- 3.6%
தாது உப்பு —- 1.1%
வெள்ளாட்டு இறைச்சியில், செம்மறி ஆட்டு இறைச்சியைவிட அதிகச் சதையும், குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது.
கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள்:
நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது, தொடை, சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள். ஏனெனில், அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும். பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும். மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும். இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்.
மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல். நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால், இறைச்சியில் தேங்கி இருக்காது. ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும். இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும்.
ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்.

பால்:
வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நமது வருங்காலப் பால் தேவையை நோக்கினால் பால் உற்பத்திக்குப் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். நமது பெரிய தேவையை வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது. அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது. அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பாலை விரும்பி ஏற்பதும் இல்லை. ஆனால் வெள்ளாடு ஏழையின் பசு எனக் கருதப்படுகின்றது. ஏனெனில், பெரிய பசுவைப் பேண முடியாத ஏழைகள் வெள்ளாடுகளை வளர்க்க முடியும். வீட்டுத் தே¨க்குச் சிறிது வெள்ளாட்டுப் பாலை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேல் நாடுகளில் சிறப்பாக பாலுக்காகவே வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் குழந்தைகளின் செவிலித் தாய் எனப்படுகின்றன.
ஆட்டுப்பாலில் ஒரு வகை வாடை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் வெள்ளாட்டுக் கடாக்களை ஆடுகளுடன் சேர்த்து வளர்ப்பதே காரணமாகும். கடா வெளியேற்றும் வாடையை ஆட்டுப்பால் உறிஞ்சிக் கொள்வதால், இவ்வகையான வாடை இருக்கின்றது. கடாக்களைத் தனியாகப் பிரித்து வளர்க்கும் போது இப்பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
வெள்ளாட்டுப் பாலின் சிறப்புகள்
  • வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையுடைதால், தாய்பாலுக்கு அடுத்த சிறப்புடையது.
  • வெள்ளாட்டுப் பாலின் புரத வேறுபாடு காரணமாக வெள்ளாட்டுப் பாலினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுவதில்லை. பல குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கும்போது ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டமும், பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வெள்ளாட்டுப் பால் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது.
  • வெள்ளாட்டுப்பால் தேவைப்படும்போது குழந்தைகளுக்குக் கறந்து கொடுக்கலாம். வெள்ளாடுகளில் எப்போது வேண்டுமானாலும் பால் கறந்து கொள்ள முடியும்.
  • குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் அருமருந்து போன்றது.
  • வெள்ளாட்டுப் பாலால் காச நோய்ப் பிரச்சனை கிடையாது. பொதுவாக வெள்ளாடு காச நோயால் தாக்கப்படுவதில்லை.
  • வெள்ளாட்டுப்பால் கொழுப்புக் கோளங்கள் சிறியனவாதலால் விரைவில் கெட்டு விடக் கூடியது. ஆகவே விரைந்து பயன்படுத்த வேண்டும். அல்லது காய்ச்சிச் சேமிக்க வேண்டும். மேலும் புருசெல்லோசிஸ் என்னும் நோய்க் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சிக் குடிப்பது நல்லது.
  • ஏழைகளின் புரதப் பற்றாக் குறையை வெள்ளாட்டுப் பால் தீர்க்கும் ஒரு கருவியாக உள்ளது.
எரு
வெள்ளாட்டுச் சாணம் சிறந்த எருவாகும். மாட்டுச் சாணத்தில் 20%க்கு மேல் எரி பொருளாக எரித்து விடப்படுகின்றது. ஆனால், ஆட்டுச் சாணம் முழுவதும் நிலத்திற்கு எருவாக மாத்திரமே பயன்படுகிறது. மேலும், மாட்டுச் சாணத்தை மக்கச் செய்துதான் வயலில் உரமாகப் போட முடியும். ஆனால் ஆட்டுச் சாணம் உடனடியாக எருவாகப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகத் தான் மாட்டுச் சாணம் மறு ஆண்டு. ஆட்டுச் சாணம் அவ்வாண்டு, எனக் குறிப்பிடப்படுகின்றது.
ஆள்கூழ் முறையில் ஆடுகளை வளர்த்தால், இன்னும் அதிக அளவில் எரு கிடைக்கும்.

No comments:

Post a Comment